

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ஆதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை 27/07/08 அன்று, இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து முதன் முதலாக இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக என்பதுபோல...முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் விமானம் சிங்கப்பூருக்கு வந்து சென்றது. நமக்கெல்லாம் உண்மையிலேயே பெருமையாகத்தான் இருக்கிறது. இதை கேள்வி பட்டவுடன் சில பெண்கள் காலரை...இல்லை..இல்லை... ஷாலை தூக்கிவிட்டு கொள்வார்கள். சரி போகட்டும் விடுங்கள். இதுவரை வானொலி வரைதான் பெண்கள் என்பதெல்லாம் மாறி வானிலும் சாகசம் செய்யத் தொடங்கிவிட்டனர். அதுவும் இந்திய பெண்கள் சாதிப்பது இந்தியராக இருக்கும் எல்லோருக்கும் பெருமைதான். அந்த வகையில் அடியேனும் பெருமைகொள்கிறேன்.
ஏன் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிருவனம்தான் இந்த முயற்சியில் முதலில் இறங்கியிருக்கிறது. அந்த விமனத்தில் சாமிலி என்ற பெண் கமாண்டராக பதவி ஏற்றுகொண்டுள்ளார், அவர்தான் அந்த விமானத்தை செலுத்திவந்துள்ளார், அவருக்கு துணையாக அம்ரித் என்ற பெண்ணும் மற்றும் சில பெண் விமான சிப்பந்திகளும் இடம்பெற்றுள்ளனர். நல்லபடியாக வந்து சிங்கப்பூரில் தரையிறங்கி மீண்டும் இந்தியா சென்று பத்திரமாக சேர்த்துவிட்டனர்.
சரி...இதை ஏன் இங்கே நான் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா....காரணம் இருக்கு, அவர்கள் பத்திரமாக வந்து சேர்ந்ததால் தான் நான் இதை இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன புரியலையா....அய்யோ சாமி....எனக்கே தெரியாமல் அந்த முதல் பயணத்தில் நானும் வந்திருக்கிறென் என்பதுதான் கதையே!
ஒருவாரம் அலுவல வேலை சம்மந்தமாக இந்தியா சென்றிருந்த நான், மூன்று நாளில் அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நம்ம பிறந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு சென்றிருந்தேன். பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் சிங்கப்பூர் திரும்பினேன். திங்கட்கிழமை வேலைக்கு வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது அந்த விமானபயண நேரம், எனவேதான் அந்த விமானத்தை தேர்ந்தெடுத்து கிளம்பிவந்தேன். சத்தியமா சொல்றேன். இங்கு வந்து சேரும் வரை எனக்கு தெரியவே தெரியாது. ஆனால் ஒரு சந்தேகம் இருந்தது. போர்டிங்க் ஆபிஸர் முதல் அனைவரும் பெண்களாகவே இருந்தனர். பயணத்தின்போது விமாணியின் அறையிலிருந்து இரண்டு பெண்கள் மட்டும் பேசுவது கேட்க முடிந்தது. ஆனால் அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. வந்து இறங்கி வீடுவந்து சேர்ந்து அன்றைய தமிழ்முரசு செய்திதாளை படித்தால் தெரிந்தது. நம்ம வந்த விமானம் ஒரு சாதனை பெண்களுக்கு என்று, நல்ல வேலை நம்மளுக்கு சோதனையா போகாமல் இருந்தவரை அந்த சாதனையை பாராட்டியே ஆகவேண்டும்.
இதில் ஒரு சுவராஷ்யமான விஷயம் என்னவென்றால், இந்த தகவலை உடனே நான் என் அப்பாவுக்கு முதலில் தெரியப்படுத்தினேன். அதுவும் பெருமையாக நான் சொல்லிகொண்டேன். ஆனால் அங்கே நடந்ததுவேறு, இதை கேள்விபட்ட என் தாய், மறுநாள் முழுவதும் பள்ளியில் உட்கார்ந்து சிந்தித்து சிந்தித்து....அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது என்றால் பாருங்கள், ஏன் என்று கேட்கிறீர்களா, அடுத்த நாள் இரவு நான் தொலைபேசியில் எங்கள் ஊருக்கு தொடர்புகொண்டபொழுது என் தங்கை போனை எடுத்தார்கள், அவளிடம் நலம் விசாரிப்பதற்குள், போனை வை அப்புறம் பேசு, அம்மாவுக்கு இரத்த அழுத்தம் சோதித்துக்கொண்டிருக்கிறென் என்று சொன்னாள். என் தங்கை ஒரு மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவி. வீட்டிலேயே அனைத்து சோதனை கருவியும் இருப்பதால் எளிதாக இருந்தது. என் அம்மாவுக்கு அன்று வழக்கத்தைவிட அதிகமாக கொதிப்பு இருந்திருக்கிறது, சிறிது நேரம் கழித்து எங்க அம்மாவிடம் பேசியபோது, அவர்கள் தன்னுடைய இரத்த கொதிப்புக்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா?!!
ஏன்ப்பா தம்பி, நேத்து நீ போன விமானத்தை இந்த குட்டியலுவ ஓட்டிகிட்டு போனாலுங்கலாமே அதாந்டா தம்பி அதை கேள்வி பட்டதிலிருந்து எனக்கு ஒரே பதட்டமா போய்விட்டது, அதிலிருந்துதான் இரத்த கொதிப்பு அதிகமாகிவிட்டது, இனிமே அதுமாதிரி விமானத்தில் ஏறாதடா.... என்று கவலையுடன் கூறியதை கேட்டவுடன், ஒரு சிறிய வருத்தத்திலும் என்னால் சிரிப்பை அடக்க மூடியவில்லை. எனது தாயார் ஒரு முதுகலை பட்டம் பெற்ற மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை! அவர்களே அப்படி பேசியது எனக்கு வியப்பாக இருந்தது! ஒரே காரணம்தான், அவங்களே ஒரு பெண்ணாக இருந்தாலும் தன் மகன் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற பயம்தான் காரணம். பிறகு அவர்களிடம் எல்லாவற்றையும் விளக்கி கூறியபோதுதான் சமாதானத்திற்கு வந்தார்கள்! உண்மையைச் சொன்னால் ஆண்களைவிட திறமையாக அவர்கள் விமானத்தை செலுத்தி வந்ததாகத்தான் எனக்கு உணரமுடிந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....இனிமே விமானிகள் எல்ல்லாம் யாரு என்று தெரிந்துகொண்டுதான் விமானத்தில் ஏறவேண்டும்போலவே...இருப்பினும் அந்த சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!